Thursday, August 18, 2011

சூரியன் - தான் இருக்கும் இடத்தில் இருந்து 7ஆம் வீட்டை மட்டும் பார்க்கும்.
சந்திரன் - அதுவும் அப்படித்தான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 7ஆம் வீட்டை மட்டும் பார்க்கும்.
புதன் & சுக்கிரன் ஆகிய இருவருக்கும் 7ஆம் பார்வை மட்டுமே
செவ்வாய் - தான் இருக்கும் இடத்தில் இருந்து 4, 7 & 8 ஆம் வீடுகளைப் பார்க்கும்
குரு - தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7 & 9 ஆம் வீடுகளைப் பார்க்கும்
சனி - தான் இருக்கும் இடத்தில் இருந்து 3, 7 & 10 ஆம் வீடுகளைப் பார்க்கும்
ராகு & கேது ஆகிய இரு கோள்களுக்கும் சொந்த வீடும் கிடையாது பார்வையும் கிடையாது. ஆகவே இந்தப் பார்வை ஆட்டத்தில் அவர்கள் சேர்த்துக்கொள்ளப்படமாட்டார்கள்.

பார்வையால் நன்மையும் உண்டு. தீமையும் உண்டு. சுபக்கிரகங்கள் பார்க்கும்போது நன்மைகள் உண்டு. தீய அல்லது பாபக் கிரகங்கள் பார்க்கும்போது தீமைகளே அதிகமாக இருக்கும். அல்லது நன்மைகள் வெகுவாகக் குறைந்துவிடும்.

உங்கள் வீட்டிற்கு எதிர் வீடு காவல்துறையில் உள்ள மிகப் பெரிய அதிகாரியின் வீடு என்றால், இயற்கையாகவே உங்கள் வீட்டிற்கும் சேர்த்து பாதுகாப்பு இருக்கும். அதே நேரத்தில், எதிர் வீட்டுக்காரன் பேட்டை தாதா என்றால் உங்கள் வீட்டின் நிலைமை எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்

7ஆம் வீட்டில் சனி இருந்தால் அது லக்கினத்தைப் பார்க்கும்
4ஆம் வீட்டில் சந்திரன் இருந்தால் அது 10ஆம் வீட்டைப் பார்க்கும்.

4ஆம் வீட்டில் அமர்ந்த சந்திரனால், ஜாதகனின் 4ஆம் வீடும் நன்மை பெறும், அத்துடன் 10ஆம் வீடும் நன்மையடையும்.

பொதுவாக சனி அமர்ந்த வீடும் நன்மையடையாது. பார்வை பெறும் வீடும் நன்மையளிக்காது. 4ல் சனி அமர்ந்தால் சுகக்கேடு. 2ல் சனி அமர்ந்தால் கையில் காசு தங்காது. அத்துடன் சிலர் குடும்ப வாழ்க்கையைத் துறந்து விட்டு, பொருள் ஈட்டும் முகமாகத் தூர தேசங்கள் வாழ நேரிடும்.

சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது அமிர்தயோக நாளாகிவிடும்.

எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்?

கீழே கொடுத்துள்ளேன்.

ஞாயிற்றுக்கிழமை: உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி, திருவோணம், பூசம், மூலம்
திங்கட்கிழமை: சுவாதி, புனர்பூசம்,ரோகிணி, மிருகசீரிடம்
செவ்வாய்க் கிழமை: உத்திரம், மூலம்
புதன் கிழமை: உத்திராடம், பூரம், பூராடம், பூரட்டாதி, உத்திரம்
வியாழக்கிழமை: சுவாதி, மூலம் 
வெள்ளிக்கிழமை: அஸ்விணி, பூசம், ஹஸ்தம், மூலம்
சனிக்கிழமை: மகம், சதயம், கார்த்திகை, சுவாதி


மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று அமிர்தயோகம்.

அமிர்தயோகத்தன்று சுப காரியங்களைச் செய்யலாம். நமக்குச் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பணிகளைச் செய்யலாம்.

சில கிழமைகளுடன் சில நட்சத்திரங்கள் சேரும்போது, அது ஒவ்வாத நாளாகிவிடும்.

எந்தக் கிழமைகளும் எந்த நட்சத்திரங்களும் அப்படிச் சேரும்போது, அது உண்டாகும்?

கீழே கொடுத்துள்ளேன்.

ஞாயிற்றுக்கிழமை: அவிட்டம், கார்த்திகை
திங்கட்கிழ்மை: அஸ்விணி, உத்திராடம்
செவ்வாய்க் கிழ்மை: பூரட்டாதி, ரோகிணி, விசாகம், திருவாதிரை
புதன் கிழமை: ஹஸ்தம்
வியாழக்கிழமை: சதயம், கார்த்திகை, அனுஷம், உத்திரம், திருவாதிரை
வெள்ளிக்கிழமை: ரொகிணி, மகம்,திருவோணம், ஆயில்யம்
சனிக்கிழமை: ஆயில்யம், பூரட்டாதி, சித்திரை, உத்திரம்


மேற்கண்ட கிழமைகளில், குறிப்பிட்டுள்ள இந்த நட்சத்திரங்கள் சேர்ந்துவந்தால் அன்று மரணயோகம்.

மரணயோகத்தன்று சுப காரியங்களைச் செய்ய மாட்டார்கள்.

செய்தால் என்ன ஆகும்?

ஊற்றிக்கொண்டு விடும்!

அன்று செய்யும் முக்கியமான செயல்கள் விருத்தி அடையாது. வளர்ச்சி யடையாது.

உதாரணத்திற்கு, மரணயோகத்தன்று நீங்கள் ஒரு இடத்தை வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். நிலம் உங்களிடம் தங்காது. கையை விட்டுப் போய்விடும். அல்லது சிக்கல் மிகுந்த இடமாகி உங்கள் பணம்  மாட்டிக் கொண்டுவிடும். 

மரண யோகத்தன்று ஒருவர் புதிதாக ஒரு வியாபாரத்தைத் தொடங்கினால், அது அபிவிருத்தியாகாது. வியாபாரம் செழிப்படையாது.

சரி, அன்றையத் தேதியில், திருமணம் செய்து கொண்டால், மண வாழ்க்கை கசப்பில் முடிந்துவிடும். பிரிவில் முடிந்துவிடலாம்.

பணி மாற்றத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்கிறீர்கள். சென்று அங்கு பணியில் சேரும் நாள், மரண யோக நாளாக இருந்தால், அங்கே நீங்கள் பல பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.

மரணயோகத்தன்று யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கொடுத்தால் அது வராக் கடனாகிவிடும். வங்கி மொழியில் சொன்னால் NPA (non performing asset) ஆகிவிடும்

ஆகவே நற் செயல்களுக்கு மரணயோக நாட்களைத் தவிர்ப்பது நல்லது.

சரி, அன்று என்னதான் செய்யலாம்?

வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பதற்கு அந்த நாளைப் பயன்படுத்தலாம். கடன் தீர்ந்துவிடும். அந்த நபரிடமோ, அல்லது அந்த வங்கியிலோ மீண்டும் கடன் ஏற்படாது.

இதுபோல முடிவிற்குக் கொண்டுவர வேண்டும் என்று நினைக்கும் செயல்களை, அன்று செய்யலாம்.